சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கு புதன்கிழமை (அக்.11) கலந்தாய்வு தொடங்க உள்ளது.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தப் படிப்புகளுக்கு 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 396 இடங்களும், 17-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் 600 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் புதன்கிழமை (அக்.11) நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல்...: முதல் நாள் சிறப்புப் பிரிவினர் மற்றும் தரவரிசை 1 முதல் 520 வரை, கட்-ஆஃப் மதிப்பெண் 198.50 முதல் 192.50 வரையுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.