சென்னை: டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தங்களுக்கு சொந்தமான இடங்களில் தேங்கும் நீரை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கடுமையாகப் பரவி வருகிறது.இதன் காரணமாக உண்டாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தலைநகர் சென்னையில் வீடுகள், பல்வேறு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கட்டடங்களில் டெங்கு பரவக் காரணமாக இருக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகாத வகையில், நன்னீரைத் தேங்க விடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக விழிப்புணர்வு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 48 மணி நேரத்தில் அத்தகைய பொருட்களை நீக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யா விட்டால் பொது சுகாதாரத் துறை அத்தியாவசிய சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் நீக்கி விடுவதாக உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் சென்னையில் நேற்று பல்வேறு தரப்பட்ட உணவகங்களைச் சேர்ந்த 600 பேரை ஒன்றிணைத்து விரிவான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்குவது குறித்த நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சலின் காரணமாக அதிக அளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ள சேலம் மாவட்டத்தில் மேலும் 16 சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட குழு அனுப்பட்டுள்ளது. பல்வேறு விதங்களில் அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலின் முதல் இரண்டு நிலைகள் பாதிப்பின் பொழுது சிகிச்சை எடுப்பதற்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வசதிகள் உள்ளது. தற்பொழுதுஅதனை முழுமையான அவசர சிகிச்சை பிரிவு வரைக்கும் விரிவு படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்பு உண்டானவர்கள் நேரடியான மருத்துவ கண்காணிப்பில் இருந்தால் உயிரிழப்பினைத் தடுக்கலாம். குழந்தைகள் ஒரு வாரமும், பெரியவர்கள் ஐந்து நாட்களும் இருக்க வேண்டும்.
இந்த தடுப்பு பணியில் மருத்துவர்களின் நீடித்த பங்களிப்பினை உறுதி செய்ய சேலத்தில் இன்று மதியம் இந்திய மருத்துவ கழகத்தின் கூட்டம நடக்கவுள்ளது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.