தமிழக காவல் துறைக்கென பிரத்யேக முகநூல் பக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
சேலம் மேட்டூரில் நிரந்தர காவல் பயிற்சி பள்ளி, நிர்வாகக் கட்டடங்கள், சென்னை புதுவண்ணாரப்பேட்டை, கோவை கோட்டூர், ராமநாதபுரம் நகரம், தொண்டி, தேனி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, நெல்லை தாழையூத்து, தூத்துக்குடி குலசேகரப்பட்டினம், கயத்தாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.
கோவை சாய்பாபா காலனி, முடீஸ், காஞ்சிபுரம் மாவட்டம் மகரல், தேனி குமுளி, அரியலூர், மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஆயுதப்படைக்காக கட்டப்பட்ட கட்டடங்கள், சென்னை ஆலந்தூரில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அலுவலகக் கட்டடங்கள், கோவை, சென்னை புழல் சிறைச் சாலை வளாகங்களில் புதிய கட்டடங்கள் என பல்வேறு கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.
முகநூல் பக்கம்: தமிழக காவல் துறைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தையும் (Tamil Nadu Police) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.