புது தில்லி: டிசம்பர் 31ம் தேதிக்குள் சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஹிமாச்சல் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவித்தார்.
அப்போது அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்தும் பதிலளித்தார். டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே. நகர் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.