எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான திட்டத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (அக்.13) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்தத் தேர்வு வரும் டிச.9-ஆம் தேதி வட்டார அளவில் நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்: மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள்) 2017-2018-ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2016-2017-ஆம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும் அல்லது அதற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வுக்கு தாங்கள் படிக்கும் பள்ளி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தலைமையாசிரியர்கள் தேவையான வெற்று விண்ணப்பங்களை அக். 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50- உடன் அக். 28-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
உதவித்தொகை எவ்வளவு? பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள்கள் மற்றும் இணையதள முகவரி குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.