நடந்து முடிந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினார் ஆனார். ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடாமல் கைரேகையுடன் சமர்பிக்கப்பட்டது என்றிருந்தது.
இந்தக் கைரேகையை உறுதிசெய்து அதிமுக-வின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், ஒப்புதல் கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்துக்கு உடன் இணைத்து அனுப்பினார்.
இதுதொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், கைரேகையை உறுதி செய்யுமாறு மதுசூதனனுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டாரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் வில்ஃபர்ட் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதில் கூறியதாவது:
மதுசூதனன் அளித்த கடிதத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அதிகாரத்தை ஜெயலலிதா மதுசூதனனுக்கு அளிக்கவில்லை. அவர் அதிமுக-வின் அவைத்தலைவர் என்ற அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார்.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 27-ந் தேதிக்குகள் ஜெயலலிதாவுக்கு அச்சமயம் சிகிச்சை அளித்த மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.