அதிமுகவின் 46 -ஆவது ஆண்டு விழாவையொட்டி வரும் 17 -ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்து, வரும் 17 - ஆம் தேதி 46 -ஆவது ஆண்டு ஆரம்பிக்கவுள்லது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணம் பூசி கொடிகளை ஏற்றி, எம்.ஜி.ஆரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
வரும் 20 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு பொதுக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.