புதுவையில் ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசி புகலிடமாக உள்ளது என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆளுநர் மாளிகையே புதுவை மக்களின் கடைசி புகலிடமாக உள்ளதால் தான் அது மக்கள் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக குறைகேட்பு கூட்டம், பார்வையாளர்கள் சந்திப்பு, சமூக கலாசார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதை தான் பிரதமர் மோடியும் வலியுறுத்தி உள்ளார். அனைத்து தரப்பைக் காட்டிலும் ஆளுநர் மாளிகை தான் மக்களின் நம்பத்தகுந்த இடமாக உள்ளது.
நீதி, நிவாரணத்துக்காக வரும் மக்களின் நலனே முக்கியமாகும். மத்திய அரசுக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் இடையே இணைப்பு பாலமாக ஆளுநர் மாளிகை உள்ளது. குடியரசுத் தலைவரும் மாநாட்டில் பேசுகையில் எந்த தவறான தகவலையும் வெளிப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார். பொதுமக்கள் நலன் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை காப்பாறற வேண்டும். மாளிகையின் ஒவ்வொரு செயலும் மக்கள் நம்பும்படி இருக்க வேண்டும். ஆளுநர் மாளிகையின் மீதான நம்பிக்கை என்பது யூனியன் பிரதேசத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே உளள அரசியல் சட்ட இணைப்பின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையாகும் என்றார்