ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருடன் ஒரு படகை, இலங்கைக் கடற்படை வியாழக்கிழமை சிறைபிடித்துச் சென்றுள்ளது.
ராமேசுவரத்திலிருந்து 390-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.
இவர்கள், வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த சார்லஸ் என்பவரது படகை சிறைபிடித்தனர். அப்படகிலிருந்த பாண்டி (45), ரோமியோ (27), முருகன் (40), ஜார்ஜ் (30), ரெமிஜூயஸ் (37) ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். மேலும், மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நீரியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதையடுத்து, காவல் துறையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அலெக்ஸ்ராஜா, 5 மீனவர்களையும் அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.