தமிழகத்தில் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்ததாக வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ. 1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறைஅமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மாலை பொதுமக்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கும் பணியைத்தொடக்கி வைத்து அமைச்சர் பேசியது:
முதல்வர் உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு தடுப்புப் பணியை கண்காணிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாவதற்குக் காரணமாக இருந்த வணிக நிறுவனங்களிடமிருந்து தமிழகம் முழுவதும் ரூ. 1 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அவர்களின் ஆலோசனை பெற்று தமிழகத்தில் டெங்குவைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, கந்தர்வகோட்டை எம்எல்ஏ- பா. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.