தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் மர்மக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பழங்கள், ரொட்டி ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த புறநோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயத்தை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து அரசு பொய்யான தகவல்களை கூறி வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லை. தமிழகத்தில் தற்போதைய ஆட்சி நீடிக்கக் கூடாது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.
முன்னதாக திருவள்ளூர் பஜார் வீதி, தேரடி பகுதியில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விஜயகாந்த் வழங்கினார்.
அப்போது, மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த், நிர்வாகிகள் கிழானூர் சுந்தர், நகரச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.