மன்னார்குடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மன்னார்குடி காளவாய்க்கரை, கே.கே. நகரைச் சேர்ந்த ரகுராமன் மகள் மதுமதி (20). இவர், பிளஸ் 2 முடித்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு தணிக்கையாளர் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட மதுமதி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்தார். புதன்கிழமை அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு, மதுமதியின் ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுமதியை சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.