மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 31,236 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் வியாழக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 19,225 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 31,236 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15 ஆயிரம் கனஅடியிலிருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 96.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.30அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் மேட்டூர்அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 61.39 டி.எம்.சியாக இருந்தது.