தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இவ்விகாரம் தொடர்பாக மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், மத்திய குடும்பநலன் மற்றும் சுகாதாரத்துறை இமையமைச்சர் அஷ்வின் குமார் சௌபே, சென்னை ராஜீவ் காந்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து பேசிய மத்திய இணையமைச்சர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யும். தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடக்கிறது என்றார்.