சீர்காழி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.
நாகை மாவட்டம், சீர்காழி ஈசானியத் தெரு மேலசந்து பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (55). இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு, அருகில் உள்ள கலியமூர்த்தி (65), ராமதாஸ் மனைவி மஞ்சுளா (43), சின்னத்துரை மனைவி சுசீலா (73), காளியப்பன் மகன் காளிமுத்து (40), வைரவன் மகன் பத்ரகாளி(35), சுப்ரமணியன் மகன் மாரிமுத்து(35), கணேசன் மனைவி மரகதசெல்வி (45) ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் பரவியது.
தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 8 பேரின் வீடுகளும் தீக்கிரையாகின. வீடுகளுக்குள் இருந்த நகைகள், பணம், குடும்ப அட்டைகள், தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைத்திருந்த புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமாகின.
வட்டாட்சியர் பாலமுருகன், எம்எல்ஏ பி.வி. பாரதி, நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் அரசு சார்பில் தலா ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் வேட்டி, சேலை, மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கினர். எம்எல்ஏ பி.வி.பாரதி தனது சொந்த நிதியிலிருந்து 8 குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5 ஆயிரம், வேட்டி, சேலைகள் வழங்கினார். அதிமுக நகரச் செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மணி, ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.