தமிழகம், புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வரும் 25ம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதேசமயம் தொடர்ந்து நீடிக்கும் தென்மேற்கு பருவமழை வலுவிழக்க வேண்டும்.
அதிகபட்சமாக பூண்டி, வந்தவாசியில் தலா 5 செ.மீ., காஞ்சிபுரம் 4 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.