தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சிகள் தோன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தோன்றியது. அது வலுவடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் திங்கள்கிழமை காலை லேசான மழை பெய்தது. மாலையில் நகரின் பல்வேறு பகுதியில் பரவலாக கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வலுவடைந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்தத்த தாழ்வுப் பகுதியானது செவ்வாய்க்கிழமை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரு தினங்களுக்கு (செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை) பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது புயல் எதுவும் உருவாவதற்கு வாய்ப்பில்லை என்றார் அவர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்பபடி 30 மி.மீட்டர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.