அதிமுகவில் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள் சசிகலா, டிடிவி தினகரன் பக்கம்தான் உள்ளனர் என்று தேர்தல் ஆணையத்தில் தெரிவித்ததாக அவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சசிகலா, டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர் என்பதை தெரிவித்தோம். ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பினோம். கட்சி விதிகளின்படி, பெரும்பான்மையை பொதுக் குழு உறுப்பினர்களுடன், அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என வாதிடப்பட்டது. எங்களுடைய வாதங்கள் அனைத்தும் தோற்றாலும், சின்னத்தை முடக்கி வைத்தாலும், வைக்கலாமே தவிர, ஒரு தரப்புக்கு மட்டும் சின்னத்தை அளிக்கக் கூடாது என்ற வாதத்தையும் முன்வைத்தேன் என்றார்.
டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் கூறுகையில், 'எங்களது தரப்பில் ஒன்றரை மணி நேரம் வாதம் முன் வைக்கப்பட்டது. எங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களையும் படித்துப் பார்த்து, முடிவெடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. சின்னத்தை முடக்கச் சொல்லி எங்கள் தரப்பில் வலியுறுத்தவில்லை' என்றார்.
இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் விசாரணையில் பங்கேற்ற மூத்த தலைவர் கே.பி. முனுசாமி கூறுகையில், 'சசிகலா, தினகரன் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் தொடர்பாக எவ்வித பிரமாண வாக்குமூலமும் அளிக்கவில்லை. 6 பேருடைய பிரமாண வாக்குமூலம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மட்டுமே முன்வைத்தனர். இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் சொல்லியிருக்கின்றனர். பல்வேறு தியாகங்களுக்குப் பின் இரட்டை இலைச் சின்னம் நிலைநிறுத்தப்பட்டது. ஒன்றரை கோடி தொண்டர்களை ஜெயலலிதா உருவாக்கி அளித்துள்ளார். தியாகத்தால் உருவான இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் எனக் கூறுபவர்கள் உண்மையான அதிமுக தொண்டர்களாக இருக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக எப்போது தீர்ப்பு வழங்கினாலும் எங்களுக்குதான் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும் என்றார்.