கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி துரத்தியடித்தனர். மேலும், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விசுவாசம் என்பவரது விசைப்படகை சிறைப்பிடித்தனர்.
அப்படகில் இருந்த மரியஜோசப், சந்தியா, கிளிண்டன், ஜோசப், சுதன், பாஸ்கரன், சக்திபாலன், ரோமன் ஆகிய 8 மீனவர்களை கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அதையடுத்து, மீனவர்கள் 8 பேரையும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர், நீதிபதி அலெக்ஸ்ராஜா மீனவர்களை அக்டோபர் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து, மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.