மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, தீபா பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதனடிப்படையில் வேலூரில் 23 - ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து, அதற்காக அனுமதி கோரி சத்துவாச்சேரி காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்தேன். ஆனால், அவர் அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே, காவல்துறை ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.