டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரி (9) காய்ச்சல் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே போல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சேவுகன் மகன் நிதிஷ்குமார் (12), சமயநல்லூர் அருகே உள்ள தேனூரைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற வினிதா (12), செக்காணூரணியைச் சேர்ந்த மூர்த்தி மனைவி பாண்டீஸ்வரி (18) ஆகியோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
இதே போல் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (24) டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, தற்போது காய்ச்சல் பாதிப்பால் வரும் அனைவருக்கும் சிறப்புக் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது அரசு மருத்துவமனையில் குழந்தைகள் 106 பேர், பெரியவர்கள் 291 பேர் உள்பட மொத்தம் 397 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.