தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள தீவிர தடுப்பு நடவடிக்கை மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு, நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 37 நோயாளிகளைப் பார்வையிட்ட நலம் விசாரித்த அமைச்சர், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவ சிகிச்சையில் ஏதேனும் குறை உள்ளதா, மருத்துவர்கள் நன்கு கவனித்துக் கொள்கிறார்களா என்று நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: டெங்கு நோய் பரவாமல் தடுக்க அளிக்கப்பட்டு வரும் நிலவேம்பு கஷாயம் குறித்து சமூக வலைதளங்களில் சிலர், பீதியைக் கிளப்பும் வகையில் தவறான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் திறன் கொண்ட நிலவேம்பு கஷாயம், கிண்டி கிங் ஆய்வு மையத்தில் பரிசோதிக்கப்பட்டு உரிய ஆய்வுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என பயப்படத் தேவையில்லை. கடந்த வெள்ளத்திற்குப் பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் இன்பவல்லி, தென்சென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.