தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை, வரும் 25 -ஆம் தேதிக்கு மேல் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், " வங்கக்கடலில் தற்போது நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்து பின்பு, அக்டோபர் 25 -ஆம் தேதி கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும் சூழல் தென்படுகிறது. எனவே, வரும் 25 -ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது' என்றார் அவர்.
மழைக்கு வாய்ப்பு: மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை பதிவான மழை விவரம் (மி.மீட்டரில்): பூண்டி, வந்தவாசி - 50, காஞ்சிபுரம் - 40, உத்தரமேரூர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் - 30, சென்னை நுங்கம்பாக்கம், ராமநாதபுரம், மதுராந்தகம், திண்டிவனம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - 20, விழுப்புரம், கேளம்பாக்கம், தாம்பரம், திருவண்ணாமலை, செம்பரம்பாக்கம், மகாபலிபுரம் -10