வழக்குரைஞர்கள் முன் நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'நான், குமார் என்பவருடன் வழக்குரைஞர் ஒருவரின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர் வழக்குரைஞர் முன்னிலையில் எனக்கும், குமார் என்பவருக்கும் திருமணம் நடந்ததாகக் கூறி, அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அந்தப் பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. குமார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்து திருமண சட்டப்படி இரண்டு நபர்கள் முன்பு ஒரு ஆணும், பெண்ணும் சீர்திருத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டால் அது செல்லுபடியாகும். அந்த இரண்டு நபர்கள் உறவினர்கள், நண்பர்கள் வேறு சிலராகவும் இருக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் நடந்த குறுக்கு விசாரணையின் போது மனுதாரர் அளித்த பதிலுக்கு நேரெதிரான பதிலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்குரைஞர் முன் நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியாகும் என்று கூறி உத்தரவிட்டனர்.