முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தனது தந்தை டி.ஞானசேகரன் என்ற குயில்தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இதையடுத்து பேரறிவாளனை ஒரு மாத பரோலில் செல்ல மாநில அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு வந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான போலீஸார், பாதுகாப்புடன் இரவு 8.54 மணிக்கு மத்திய சிறையில் இருந்து காவல் துறை வாகனத்தில் ஜோலார்பேட்டைக்கு பேரறிவாளனை அழைத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதத்துக்கு பரோல் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் 1 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தார்.