சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான, ஒரு நபர் விசாரணை கமிஷனின் முதற்கட்ட விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது.
உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதியன்று மாரடைப்பு ஏற்பட்டது. மறுநாள் 5-ந்தேதி அன்று இரவில் ஜெயலலிதா மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது. பின்னர் அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டு அணியாக பிரிந்தது. அப்பொழுது ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுத்தார்.
பின்னர் காட்சிகள் மாறி இரு அணிகளும் இணையும் சூழல் உண்டானது. ஆனால் அணிகள் இணைப்புக்கு விதிக்கப்பட்ட இரு நிபந்தனைகளில் ஒன்றாக ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.
பின்னர் ஆகஸ்டு 17-ந்தேதியன்று தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றார். அதன் தொடர்ச்சியாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 25.09.17 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
தற்பொழுது நீதிபதி ஆறுமுகசாமி அடுத்த வாரம் புதன் கிழமை தனது முதற்கட்ட விசாரணையை தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் துவக்கமாக தலைமைச் செயலகம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.