கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை வியாழக்கிழமை அதிகரித்து காணப்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் காலை முதல் மிதமான வெயிலும் பிற்பகலில் மேமூட்டமும் , குளிருடன் இதமான சீதோஷன நிலை நிலவியது. இந்த சூழ்நிலையில் தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.
அவர்கள் ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள் சவாரி,குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர் மேலும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் செவண்ரோடு, அப்சர்வேட்டரி சாலை, அண்ணா சாலை,பூங்கா சாலை, ஏரிச்சாலை,பாம்பார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் செல்ல முடியாமல் காத்துக் கிடந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர்.
போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக நியமிக்க கோரிக்கை: விடுமுறை நாள்கள்,பண்டிகை கால நாள்களில் வழக்கம் போல கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் கொடைக்கானலில் போக்குவரத்தை சரி செய்வதற்கும், பாதுகாப்பிற்கும், மிக குறைந்தளவே போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏரிச்சாலை,கலையரங்கம் பகுதி, டிப்போ சாலை ஆகியப் பகுதிகளில் சமூக ஆர்வலர்கள்,வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்தை சரி செய்தன.
இதனால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களில் போக்குவரத்திற்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.எனவே மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் நாள்களில் கூடுதல் காவலர்களை பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.