கரூர்: தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் எய்ட்ஸ் நோய். சிக்குன்குனியா காய்ச்சல் தமிழகத்தையே முடக்கிப் போட்டது. அவர்கள் ஆட்சியை எந்தப் பெயர் கூறி அழைப்பது? என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கரூரில் நகர அதிமுக சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் 46-வது ஆண்டுத் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லோராலும் எளிதில் அணுகும் விதமாகவும், பல முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவராகவும் விளங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், இரட்டை இலை சின்னத்தை பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த ஆட்சியை டெங்கு ஆட்சி என்கிறது திமுக. ஆனால் அவர்கள் ஆட்சியில்தான் எய்ட்ஸ் நோய் அதிகளவில் பரவியது. சிக்குன்குனியா என்னும் காய்ச்சல் தமிழகத்தையே முடக்கிப் போட்டது, பன்றிக் காய்ச்சல் பயமுறுத்தியது. அவர்கள் ஆட்சியை இதில் எந்தப் பெயர் கூறி அழைப்பது?
எதிர்க்கட்சித்தலைவர் இந்த ஆட்சியை கலைக்கலாம் எனத் திட்டமிட்டார், ஆனால் முடியவில்லை. அதனால் ஏதோதோ பேசுகிறார். தமிழகத்தில் ஜெயலலிதா விட்டுச்சென்ற அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு பொற்கால ஆட்சி நடக்கிறது. இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றார்.