திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர் பலியானார். 40 பேர் காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து மூலம் ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்கள் இன்று காலை திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர்.
திருத்தணி மலைப் பாதையில், சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி மலைப் பாதையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மதன் உயிரிழந்தார். பேருந்தில் இருந்த 40 பயணிகள் காயமடைந்தனர்.
உடனடியாக அப்பகுதியில் ஏராளமானோர் விரைந்து வந்து பேருந்துக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். சம்பவப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 40 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு திருத்தணி கோட்டாட்சியர் நேரடியாக வந்து ஆய்வு நடத்தினார்.