ராமேசுவரத்தில் சனிக்கிழமை கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராமேசுவரத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பின்பு தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். அக்னி தீர்த்தக்கரைக்கு வரும்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான படகுகளை கண்டவுடன் கடலில் படகில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதனை போக்கிடும் வகையில், அக்னி தீர்த்தக் கரை பகுதியில் தனியாருக்கு செந்தமான சொகுசுப் படகு சவாரி உள்ளது. இதில், 60- க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கடலில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்த பயணத்தின்போது கடலில் இருந்தவாறு ராமநாதசுவாமி கோயிலின் நான்கு கோபுரங்களையும் காணமுடியும். இதனால் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படகு பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் இருந்தே கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் படகு கரைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்பு மாலை நேரத்தில் கடல் வழக்கமான நிலைக்கு வந்தவுடன் சில பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடிந்தது. காலை முதல் பிற்பகல் வரையில் வந்த பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.