சென்னை: அரசினை எதிர்த்து வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் இருவரும் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும் என்று திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி மாதத்தில், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்பொழுது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சி கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
அப்பொழுது அதிமுக உறுப்பினர்களாக இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் இருவரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
பின்னர் பலகட்ட சமரச முயற்சிகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்து விட்டனர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும். 'மாஃபா' பாண்டியராஜன் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்பொழுது திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளார்.அதில் அவர் கட்சிக் கொறடா உத்தரவினை மதிக்காமல், அரசினை எதிர்த்து வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் இருவரும் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும்? இவர்கள் இருவரும் அமைச்சராக செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கில் தமிழக ஆளுநர் மற்றும் சட்டப் பேரவை செயலர் இருவரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.