சென்னை காசிமேட்டில் விசைப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ள சீன எஞ்சின்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
படகுகளில் பொருத்தப்பட்ட சீன எஞ்சின்களை அகற்றக்கோரி சென்னை காசிமேட்டில் ஒருதரப்பு மீனவர்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை ஏற்காத மீனவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்து சிலர் கற்களை வீசி தாக்கியதில் 5 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதம் அடைந்தன. பதற்றத்தை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விசைப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ள சீன எஞ்சின்கள் போலீசார் உதவியுடன் கிரேன் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.