சென்னை: உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தினைச் சேர்ந்த திரிலோக்க்ஷன குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அதில் பொது கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கட் அவுட், பேனர் வைப்பதனால் உண்டாகும் பிரச்சினைகளை பட்டியலிட்டு அவற்றை முறைப்படுத்தக் கோரியிருந்தார்.
விசாரணை முடிந்து அந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் பொது இடங்களில் விளம்பரம் செய்வது குறித்து இயற்றப்பட்டுள்ள 1959-ஆம் ஆண்டு 'விளம்பரப்படுத்துதல் சட்டம்' பற்றி ஆய்வு செய்து, அவ்வப்பொழுது தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் இந்த தடை உத்தரவானது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு செய்ய வேண்டுமென்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கபப்ட்டுள்ளது .