மடிக்கணினி மூலம் உலகளாவிய அறிவை மாணவியர் பெறமுடியும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளஸ் 2 மாணவிகள் 563 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கி அவர் பேசியதாவது:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டம் மடிக்கனிணி வழங்கும் திட்டமாகும். மடிக்கணினிகள் மூலம் மாணவியர் உலகளாவிய தகவல்களைப்பெற்று தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்ள முடியும். மறைந்த முதல்வரின் இந்த கனவுத்திட்டத்தை தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். மாணவியர் மடிக்கணினியை நல்ல விஷயங்களை கற்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்: மதுரை மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1,10, 416 மடிக்கனிணிகளை அரசு வழங்கியுள்ளது. குக்கிராம மாணவியருக்கும் வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களையும் தெரிந்துகொள்ள மடிக்கனிணி உதவும் என்றார். மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா:
மடிக்கணினிகளை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர் நமது கலாசாரம், பண்பாட்டை தவறாது பின்பற்றுபவர்கள். ஆகவே, தங்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் மடிக்கனிணியைப் பயன்படுத்துவார்கள் என்றார்.
எம்எல்ஏக்கள் பெரியபுல்லான் (மேலூர்), நீதிபதி (உசிலம்பட்டி) மற்றும் மதுரை கிழக்குதொகுதி முன்னாள் எம்ல்ஏ க.தமிழரசன் உள்ளிட்டோரும் பேசினர். மேலூர் கல்விமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்என்.மாரிமுத்து வரவேற்றார்.