இந்திய குடியரசுக் கட்சியின் (கவாய் பிரிவு) மூத்தத் தலைவரும், மருத்துவருமான சேப்பன் (80) சென்னையில் வியாழக்கிழமை (ஆக.31) காலமானார்.
சென்னை ஆயிரம்விளக்கு அஜீஸ் முல்க் தெருவில் வசித்து வந்த அவர் மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
டாக்டர் சேப்பன் எம்.பி.பி.எஸ்., டிஜிஓ (மகப்பேறு மருத்துவம்), எம்.ஏ. (அரசியல்) படித்தவர். இந்திய குடியரசுக் கட்சியின் (கவாய் பிரிவு) மாநிலத் தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார். அதே கட்சியின் அகில இந்திய இணைப் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகிய பிறகு, முழுமையாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஏழை நோயாளிடம் பணத்தைக் கேட்டுப் பெறாமல், அவர்களுக்கு மருத்துவம் அளித்து வந்தவர்.
டாக்டர் சேப்பனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு மந்தைவெளியில் உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 9444265316
இரங்கல்: இந்திய குடியரசுக் கட்சியின் (கவாய் பிரிவு) மூத்த தலைவர் டாக்டர் சேப்பன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்: அரசியலிலும், சமூகப் பணியிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களில் டாக்டர் சேப்பன் மிகவும் முக்கியமானவர். பாமக தொடங்கப்பட்ட பிறகு 1991 -ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி அமைக்கக் காரணமாக இருந்தார். பாமக சார்பில் சமூக, சமுதாய ஒற்றுமை மாநாடுகள் நடத்தப்பட்டபோது அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்று சமுதாய ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஜவாஹிருல்லா: இந்திய குடியரசுக் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சேப்பன், அடிப்படையில் ஒரு மருத்துவராக இருந்தபோதிலும், தமிழகத்தில் பல்வேறு சமூக மக்கள் மத்தியில் நல்லிணக்கம் வளர பாடுபட்டவர். சமூக உரிமைகளுக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய காலங்கள் நினைவுகூறத்தக்கவை. சேப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அவர் தெரிவித்துள்ளார்.