சென்னை: தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி அனிதா சாவுக்கு கையாலாகாத தமிழக அரசே காரணம் என்று தமிழக ஏதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இறப்பு சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அனிதா +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன் மருத்துவ சேர்க்கைக்கான 'கட் ஆப்பாக' 196.50 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஆனாலும் நீட் தேர்வு முறையின் காரணமாக அவர் விரும்பிய மருத்துவ சீட் அவருக்கு கிடைக்கவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் அவர் என்னை அறிவாலயத்தில் வந்து சந்தித்து, நீட் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு கூறினார். உடனே மறுநாள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்த வருத்தமான சூழ்நிலையில் மாணவர்கள் எந்த விதமான தவறான முடிவும் எடுக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்த மாணவி அனிதா சாவுக்கு கையாலாகாத தமிழக அரசே காரணம் என்பது உறுதி. மாணவியின் மரணம் போன்று நிகழாமல் தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்குமாறு கூறுவதானால், இது அரசாக இருந்தால் கூறலாம். ஆனால் இது நிலை தடுமாறும் அரசாக உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.