புது தில்லி: அந்நிய செலாவணி வழக்கில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையினரால், இரண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதில், பெரா வழக்கு உட்பட 2 வழக்குகளும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் பெரா வழக்கை துரிதமாக விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுவாக ஒரு வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரித்தான் மனு தாக்கல் செய்யப்படும். முதல் முறையாக விரைவாக விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்நிய செலாவணி மோசடி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டாம் என்று கூறியதோடு, இதுபோன்ற மனுவை இனி தாக்கல் செய்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
அதோடு, இந்த மனுவை நீங்களே திரும்பப் பெறுகிறீர்களா அல்லது அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்யட்டுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உடனடியாக மனுவை திரும்பப் பெறுவதாக தினகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியதை அடுத்து மனு திரும்பப்பெறப்பட்டது.
தினகரன் மீதான இந்த அந்நியச் செலாவணி வழக்கு மீது கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.