அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு; முதல்வர் வருகை

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு; முதல்வர் வருகை


சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார்.

முன்னதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

அதிமுகவில் தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால், இது அதிமுகவின் உள்கட்சிப் பிரச்னை என ஆளுநர் கூறினார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவரை தில்லியில் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

இதற்கிடையே, அதிமுகவின் பொதுக் குழு கூட்டத்தை செப்டம்பர் 12-ஆம் தேதி கூட்ட அக் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால், "அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தவர்கள் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுக்குழுவில் கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்' என டிடிவி தினகரன் எச்சரித்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பங்கேற்கின்றனர்.

கடந்த முறை நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின்போது தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க, தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

செப்டம்பர் 12-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com