சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நெடுவாசல், கதிராமங்கலத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் விநியோகித்து, மாணவர்களைப் போராட தூண்டியதாக கடந்த ஜூலை 13 -ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர், மாணவிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தேசநலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி, அவர் கடந்த மாதம் 17 -ஆம் தேதி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவரது தந்தை எஸ்.மாதையன் உயர் நீதிமன்றத்தில், அமைதியான முறையில் போராடிய எனது மகளை அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில், அமைதியான முறையில் போராடுவதற்கு அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. ஆகையால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன், அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையை அடுத்து மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.