முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 111 பேர் பங்கேற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் எம்எல்ஏக்கள் 111 பேர் பங்கேற்று தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 2 எம்எல்ஏக்கள் வர இயலவில்லை என்பதை தெரிவித்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக புதுச்சேரியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
டிடிவி முகாமில் உள்ள 9 எம்எல்ஏக்கள் முதல்வரை தொடர்புகொண்டு ஆதரவு அளிப்போம் என கூறினர். முதல்வர் பழனிசாமி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக எம்எல்ஏக்கள ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களும் முதல்வரின் நடவடிக்கையை ஆதரிப்பதாக கூறினர். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைப்பவர்களின் கனவு நினைவேறாது. அரசுக்கு எதிராக செயல்படும் எம்எல்ஏக்களை தொகுதி மக்கள் கவனித்து கொள்வார்கள்.
மாவட்ட செயலாளர்களில் இருவர் மட்டுமே கூட்டத்துக்கு வர இயலவில்லை. வரும் 12ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.