சென்னை விமானநிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த வாலிபரிடம் இருந்து ரூ. 7.28 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது.
துபையில் இருந்து சென்னை வந்த அப்துல் நியாஸ் என்ற 25 வயது வாலிபரிடம் சென்னை விமானநிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தோகத்துக்கு இடமான வகையில் ரசாயனப் பெட்டி இருந்தது தெரியவந்தது.
புகழ்பெற்ற ரசாயன நிறுவனத்தின் பெயருடன் இருந்த அந்தப் பெட்டியை பிரித்து சோதனை மேற்கொண்டபோது திரவ வடிவிலான தங்கம் இருப்பது விசாரணைக்குப் பின்னர் தெரியவந்தது.
அந்த திரவத்தை வெப்பமிடுவதன் மூலம் அதிலிருந்த தண்ணீர் நீராவியாக வெளியேறியது. பின்னர் திரவ வடிவிலான தங்கம் தனியே பிரிந்தது. இதனை உலர்படுத்திய பின் பொடியான தங்கம் வெளிவந்தது.
இதனை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் தயார் படுத்திக்கொள்ளும் வசதியுடன் விளங்கியது. இந்த சோதனைகளை மேற்கொள்ள சுமார் 14 மணிநேரங்கள் தேவைப்பட்டது.
பறிமுதல் செய்த அந்த தங்கத்தின் மொத்த எடை 245 கிராம் ஆகும். 24 காரட் சொக்கத்தங்கமான அதன் மொத்த மதிப்பு ரூ. 7.28 லட்சம் என மதிப்பிடப்பட்டது.
அயன் திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போன்று தற்போது நூதன முறையிலான கொள்ளைகள் சென்னை விமானநிலையத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
இவை சென்னை விமானநிலைய அதிகாரிகளின் துரித நடவடிக்கை காரணமாக கண்டறியப்படுகிறது. மேலும், சென்னை விமானநிலையத்தில் மட்டும் சமீபகாலங்களில் இதுபோன்று கடத்தல் தங்கம் பிடிபடுவது அதிகரித்து காணப்படுகிறது.
முன்னதாக, ஆகஸ்டு 23-ந் தேதி இதேபோன்று மலேஷியாவில் இருந்து வந்த வாலிபரிடம் நடந்த விசாரணையில் திரவ வடிவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.