தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் வியாழக்கிழமை (செப். 7) சந்திக்கிறார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்கள் வாபஸ் பெற்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். ஆனால், இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அவரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அதிமுகவில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை என்று ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார். இதே கருத்து ஆளுநர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் செவ்வாய்க்கிழமை (செப்.5) தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான இத்தகைய அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவை டிடிவி தினகரன் வரும் வியாழக்கிழமை (ஏப். 7) சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தினகரன் கேட்டறிவார் எனத் தெரிகிறது.
சட்டப்பூர்வ நடவடிக்கை: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு, எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து டிடிவி தினகரன் முடிவு செய்வார் எனத் தெரிகிறது. சட்டப்பூர்வ அம்சங்களையும் அவர் இப்போது ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.