பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, உரிமைக் குழுவை கூட்டி விவாதிக்க முடியாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: பெரும்பான்மையை இழந்திருக்கக்கூடிய நிலையில் உள்ள தற்போதைய ஆட்சிக்கு உரிமைக் குழுவை கூட்டி விவாதிக்கும் எந்தத் தகுதியும் இல்லை.
எனினும், எங்களுடைய கடமைகளை நாங்கள் முறையாகச் செய்ய வேண்டுமென்று, 21 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்த சட்டப்பேரவைச் செயலர் பொறுப்பில் இருப்பவரிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளோம். அதில், அவர்களின் முறையீடு உரிமைப் பிரச்னைக்கு உரிய வகையில் இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளோம்.
ஆனாலும், எங்களுடைய சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி, பல செய்திகளைச் சேகரித்து, உரிய பதிலை முறையாகத் தர வேண்டுமென்றால், 15 நாள்கள் அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தைக் கொடுத்துள்ளோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 109 பேருடைய ஆதரவு மட்டுமே இருப்பதால் அவரால் ஆட்சியை நடத்த முடியாது. ஏற்கனவே, டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 பேர்ஆளுநரைச் நேரில் சந்தித்து, இந்த ஆட்சியின் மீதும், குறிப்பாக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி மீதும் நம்பிக்கையில்லை என்று தனித் தனியாக கடிதம் கொடுத்துள்ளனர்.
எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் 109 பேர் தான் கலந்து கொண்டதாக செய்திகள் வருகின்றன.
எனவே, உடனடியாக, ஜனநாயக அடிப்படையில், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
இல்லையென்றால் குதிரை பேரம் இன்னும் பெரிய அளவில் நடைபெறும். இதன் பிறகும் ஆளுநர் உத்தரவிடவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.