இலங்கை மீனவர்களால் 9 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், உபகரணங்களை

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், உபகரணங்களை இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டு, செவ்வாய்க்கிழமை இரவு விரட்டியடித்துள்ளனர்.
வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கோ. மயில்வாகனன் (55). இவருக்குச் சொந்தமான விசைப்படகில், அதே கிராமத்தைச் சேர்ந்த கி. ரவிக்குமார் (40), ரெ. செல்வமணி(42), கு. கோபால் (40), க. வெற்றிவேல் (50), ந. சிவகுமார் (40) ஆகிய 5 பேரும் திங்கள்கிழமை பகல் கடலுக்குச் சென்றனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இரண்டு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 6 பேர், இவர்களை மிரட்டியதோடு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனராம்.
இதேபோல், ஆறுகாட்டுத்துறையில் இருந்து சி. சசிகுமார் (38) என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்களான சி. ஆனந்தன் (30), சு. கலைமாறன் (50), நா. கதிரவன் (36), சி. சரவணன் (35) ஆகிய 4 பேரும் செவ்வாய்க்கிழமை பகல் கடலுக்குச் சென்றனர். இவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 14 கடல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்தனராம். 
அப்போது, இரண்டு படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் 6 பேர், ஆயுதத்துடன் இவர்களது படகில் ஏறி, மீனவர்களை மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், செல்லிடப்பேசி 1, ஜிபிஎஸ் கருவி, ஐஸ் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்தனராம்.
இலங்கை மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 9 பேரும் புதன்கிழமை காலை கரை சேர்ந்தனர். இதுகுறித்து மீனவர்களிடம் தனிப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com