மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் புதன்கிழமை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மழையின்றி ஆறுகள் வறண்ட நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்திருந்தது. இந்நிலையில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் திருப்திகரமாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நிலை இருந்தது. இந்நிலையில், மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், புதன்கிழமை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கேரள சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: தற்போது ஓணம் விடுமுறையாதலால் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குமரி மாவட்டம் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில், பத்மநாபபுரம் அரண்மணை, திருவட்டாறு கோயில், திற்பரப்பு அருவி ஆகிய இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.