ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இதையடுத்து,அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மே மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் செப்.30ஆம் தேதிக்குள் ஊதிய முரண்பாடுகளை களைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கம் பங்கேற்கவில்லை. அதே போன்று, தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை (செப்.7)முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் அக்டோபர் 2ஆம் தேதி முதல் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.
பேட்டியின் போது தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலர் ரமேஷ்கண்ணன், பொருளாளர் செங்குட்டுவன், துணைத் தலைவர்கள் பாண்டி, சிங்கார வேலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.