விழுப்புரம்: நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியை, தனது பணியை நேற்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
அரியலூர் மாணவி அனிதா உயிரிழப்பையடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியையான சபரிமாலா, அதே பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயிலும் மகன் ஜெயசோழனுடன் புதன்கிழமை காலை பள்ளி முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்படுத்தக் கோரி, அவர் நடத்திய போராட்டம் குறித்து அறிந்து வந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸார், அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறி சபரிமாலாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்த சபரிமாலா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனிடம், தனது பணியை ராஜிநாமா செய்வதாகக் கூறி கடிதம் வழங்கினார்.
இந்நிலையில், தன்னுடைய சமூக கோபத்தை வெளிப்படுத்த தடையாக இருக்கும் அரசுப் பணி தனக்குத் தேவையில்லை இல்லை. தேசம் தான் முக்கியம் என்று கூறிய சபரிமாலா, திண்டிவனம் அருகே உள்ள செக்காம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் முன்பு இன்று காலை 9 மணியில் இருந்து தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்தும், ஒரே கல்வி முறையை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சபரிமாலா தெரிவித்துள்ளார்.