டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க 15 நாள்கள் அவகாசம் வேண்டுமென விடுத்த கோரிக்கையை நிராகரித்து வரும் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடந்த ஆக. 22-இல் கடிதம் அளித்தனர்.
இந்நிலையில், கடிதம் அளித்தது தொடர்பாக 5-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
கோரிக்கை-நிராகரிப்பு: கடந்த 5-ஆம் தேதி எம்.எல்.ஏ.-க்கள் 19 பேரும் பேரவைச் செயலரிடம், விளக்கம் அளிக்க 15 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர். பேரவைத் தலைவர் தனபால் வெளியூர் சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அந்தக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அக் கடிதங்கள் குறித்து வியாழக்கிழமை பரிசீலிக்கப்பட்டது.
15 நாள்கள் அவகாசம் அளிக்க வாய்ப்பில்லை எனவும், வரும் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் 19 எம்.எல்.ஏ.க்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு புதிதாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.