திருச்சி: அனிதா தற்கொலையினைத் தொடர்ந்து நீட் விவகாரம் தொடர்பாக திருச்சியில் திமுக இன்று மாலை நடத்த இருந்த கூட்டத்துக்கு காவல்துறை 'திடீர்' என அனுமதி மறுத்துள்ளது.
அனிதாவின் தற்கொலையினை அடுத்து 'நீட்' விவகாரம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க கடந்த திங்களன்று அனைத்துக்கட்சிக் கூட்டதிற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் சார்பாக ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முத்தரசன் மற்றும் ராமசாமி, கலி பூங்குன்றன், ரவிக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் பின்வருமாறு:
1. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு அனைத்துக் கட்சிகள் சார்பாக அஞ்சலி.
2.நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காத மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்.
3. கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றுதல்
4.நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக முதலில் கூறி விட்டு பின்னர் அதனை செய்யாமல் ஏமாற்றிய மத்திய அரசுகக்கு கண்டனம்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக்கு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் இன்று அனைத்து கட்சிகளின் சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான எந்தப் போராட்டங்களையும், யாரும் நடத்த தடை விதித்து பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் பிண்ணனியில் திருச்சியில் திமுக இன்று மாலை நடத்த இருந்த கூட்டத்துக்கு காவல்துறை 'திடீர்' என அனுமதி மறுத்துள்ளது. மாநகர காவல்துறை ஆணையர் அலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.