பெரும்பான்மையை இழந்துள்ள அரசு தானாகவே ராஜிநாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்திருப்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியும். எனவே, குறுக்கு வழியில் திட்டங்களைத் தீட்டி, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான் உரிமைக் குழுவை கூட்டியது. உரிமைக் குழுவைக் கூட்டுவதற்கே இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இருந்தால்தான் உரிமைக்குழுவுக்கே பெருமை.
ஆளுநருக்கு வேண்டுகோள்: பெரும்பான்மையை இழந்துள்ள இந்த ஆட்சி, அவர்களாகவே முன்வந்து ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், இந்த அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.